Friday, 29 January 2021

அர்ஜுனன் விளக்கிய மற்றொரு அற்புதம் | விஷ்ணு பர்வம் பகுதி – 168 – 112

(வாஸுதேவமாஹாத்ம்யம்)

Arjuna describes another wonderful work | Vishnu-Parva-Chapter-168-112 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிராமணரின் குழந்தையைக் காக்க கிருஷ்ணனால் ஏவப்பட்ட அர்ஜுனன்...


Krishna and Arjuna

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, உலகத்தின் தலைவனான கிருஷ்ணனின் மகிமைகளை மீண்டும் கேட்க விரும்புகிறேன்.(1) உயரான்மாவும், நுண்ணறிவுமிக்கவனும், புராதனப் புருஷனுமான கிருஷ்ணனின் பெருஞ்செயல்களைக் கேட்பதில் இன்னும் தணிவடையாதவனாக இருக்கிறேன்" என்றான்.(2)

வைசம்பாயனர், "ஓ! மன்னா, கோவிந்தனின் மகிமைகளைச் சொல்லி முடிக்க நூறு ஆண்டுகளும் போதாது.(3) காண்டீவ வில் தரித்தவனான பீபத்சு (அர்ஜுனன்), கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மரால் தூண்டப்பட்டதும் சொன்ன பேரற்புதம் நிறைந்த கேசவனின் செயல்களை இப்போது கேட்பாயாக.(4) ஓ! குருவின் அரச வழித்தோன்றலே, மன்னர்களின் முன்னிலையில், பகைவர் அனைவரையும் வென்ற தன் அண்ணன் யுதிஷ்டிரனிடம் அவன் சொன்னதைக் கேட்பாயாக.(5)

அர்ஜுனன், "முன்பொரு காலத்தில் என் உறவினர்களைக் காண்பதற்காக நான் துவராகா நகருக்குச் சென்றேன். போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டவனாக அங்கே சில காலம் வாழ்ந்திருந்தேன்.(6) அந்த நேரத்தில் அற ஆன்மாவும், பெருங்கரங்களைக் கொண்டவனுமான மதுசூதனன், சாத்திரச் சடங்குகளின்படி ஒரு நாள் அளவுக்கு நீளும் வேள்வியை நடத்தினான் {வேள்வியில் ஒரு நாள் தீக்ஷையில் இருந்தான்}.(7) கிருஷ்ணன் வேள்வியில் அமர்ந்திருந்தபோது ஒரு பிராமணர் தன் காரியங்களைச் சொல்லி அவனது பாதுகாப்பை நாடினார்.(8)

பிராமணர், "ஓ! தலைவா, நீயே (குடிமக்களின்) பாதுகாப்பிற்குப் பொறுப்பானவன்; மேலும், நற்பணியால் ஈட்டப்பட்ட புண்ணியத்தில் நான்கில் ஒரு பங்கைப் பெறத் தகுந்தவனே பாதுகாவலன்" என்றார்.(9)

வாசுதேவன், "ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, உமக்கு நன்மை நேரட்டும். நீர் (எவருக்கும்) அஞ்ச வேண்டாம். எவ்வளவு கடும்பணியாக இருந்தாலும், உமது அச்சத்திற்குக் காரணமானவனிடம் இருந்து உம்மை நான் பாதுகாப்பேன். உமக்கு அச்சத்தை ஏற்படுத்துபவன் எவன்?" என்று கேட்டான்.(10)

பிராமணர், "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவரே, என் மகன்கள் பிறந்த உடனேயே அபகரிக்கப்பட்டனர். ஓ! பாவமற்ற கிருஷ்ணா, என்னுடைய மூன்று மகன்களும் அவர்கள் பிறந்த உடனேயே அபகரிக்கப்பட்டனர். நீ இப்போது என் நான்காவது மகனைக் காக்க வேண்டும்.(11) ஓ! ஜனார்த்தனா, என் மனைவி பேறு கால வலியில் இருக்கிறாள். என் பிள்ளை அபகரிக்கப்படாத வகையில் நீ ஏற்பாடுகளைச் செய்வாயாக" என்றார்.(12)

அர்ஜுனன், "அப்போது கோவிந்தன் என்னிடம், "நான் இப்போது வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், எச்சூழ்நிலையிலும் ஒரு பிராமணர் நம்மால் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றான்.(13)

கிருஷ்ணனின் சொற்களைக் கேட்ட நான் அந்தக் கோவிந்தனிடம், "இதில் என்னை நீ நியமிப்பாயாக. நான் இந்தப் பிராமணரின் அச்சத்தை அகற்றுகிறேன்" என்றேன்.(14)

இவ்வாறு சொல்லப்பட்டதும் சற்றே புன்னகைத்த ஜனார்த்தனன், "உன்னால் இவரைப் பாதுகாக்க முடியுமா?" என்று கேட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கிருஷ்ணனின் அந்தச் சொற்களைக் கேட்டு நான் பெரிதும் வெட்கமடைந்தேன்.(15)

இவ்வாறு வெட்கமடைந்த என்னைக் கண்ட ஜனார்த்தனன் மீண்டும், "உன்னால் அவரைப் பாதுகாக்க இயலுமென்றால் செல்.(16) பெருங்கரங்களைக் கொண்ட ராமர் {பலராமர்}, பெருந்தேர் வீரனான பிரத்யும்னன் ஆகியோரைத் தவிர, விருஷ்ணி, அந்தகக் குலத்தோர் பிறர் உன்னைப் பின்தொடர்வார்கள்" என்றான்.(17)

பிறகு விருஷ்ணி படை சூழ நான் என் முன் அந்தப் பிராமணரை வைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றேன்" என்றான் {அர்ஜுனன்}.(18)

விஷ்ணு பர்வம் பகுதி – 168 – 112ல் உள்ள சுலோகங்கள் : 18
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்