Tuesday 12 May 2020

தானவர்களின் போர் ஆயத்தம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 43

(தை³த்ய ஸேன வர்ணனம்)

The preparation of the Danavas for the battle | Harivamsha-Parva-Chapter-43 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : அசுரப் படையின் முன்னணியில் நின்ற மயன், தாரன், விரோசனன், ஹயக்ரீவன், வராஹன், கரன், துவஷ்டன், ஸ்வேதன், அரிஷ்டன், கிசோரன், லம்பன், ஸ்வர்ப்பானு ஆகிய அசுரர்கள்; அசுரர் படையின் தோற்றம்...


War between gods and demons

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாவமற்றவனே, போரில் தடுக்கப்பட முடியாதவர்களான தைத்தியர்களும், தானவர்களும், விஷ்ணுவால் ஏற்படப்போகும் பயங்கரத்தைக் கேட்டு, பெரும் அளவில் போருக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர்.(1) போரிட விரும்பிய தானவன் மயன், மேருமலைக்கு மேலெழும் சூரியனைப் போல ஒரு தங்கத் தேரில் ஏறினான். ஆயிரத்து இருநூறு முழம்[1] சுற்றளவுடன் கூடிய நான்கு வலுவான சக்கரங்களைக் கொண்டதும், எங்கும் செல்ல வல்லதும், பெரும் ஆயுதங்கள் பலவற்றைக் கொண்டதும்,(2) கிங்கிணியொலி எழும் சிறு மணிகளால் நிறைந்ததும், சிறுத்தைத் தோல் போர்த்தப்பட்டும், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும்,(3) விலங்குகள் மற்றும் பல்வேறு பறவைத் திரள்களின் செயற்கை வடிவங்களைக் கொண்டதும், பல தெய்வீக ஆயுதங்கள் மற்றும் அம்பாறாத்தூணிகளைக் கொண்டதும், மேகங்களின் முழக்கம் போன்ற ஒலியைக் கொண்டதும்,(4) அழகிய அச்சுகளைக் கொண்டதும், அழகிய கூடுகள் மற்றும் மலைகளைப் போன்ற கதாயுதங்களால் நிறைந்தும், சிறப்புமிக்கத் தேர்களில் மிகச் சிறந்த தேருமாக அஃது இருந்தது.

[1] மூலத்தில் "த்ரி-நல்வ-அந்தரம்" என்றிருக்கிறது. ஒரு நல்வம் என்பது 400 முழங்களைக் கொண்ட அளவாகும். எனவே மயனுடைய தேரின் சக்கரம் 1200 முழம் சுற்றளவைக் கொண்டதாக இருந்திருக்கிறது.

அது பெருங்கடலைப் போலப் பெரிதாக இருந்தது, அதன் இணைப்புகள் கேயூரங்கள் மற்றும் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் கூபரங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தன, காற்றில் அசையும் பெருங்கொடிகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. சூரிய எழுகையில் தோன்றும் மந்தர மலையைப் போலவும், யானைகளின் இளவரசனைப் போலவும், பெருங்கடலைப் போலவும் அது தெரிந்தது. அஃது ஆயிரக்கணக்கான கரடிகளைக் கொண்டிருந்தது, அதன் சக்கரங்களுடைய ஒலி பெருங்கடலின் முழக்கத்தைப் போன்றிருந்தது. அது பிரகாசமானதாகவும், வானில் செல்லவல்லதாகவும், பகைவரின் தேர்களைத் தாக்கவல்லதாகவும் இருந்தது. {இது தானவன் மயன் ஏறிய தேரைக் குறித்த வர்ணனை}.(5-7)

தானவன் தாரன், மிகச்சிறந்த இரும்புத் தேரொன்றில் ஏறினான். அஃது இரண்டு மைல்கள்[2] அளவு கொண்டதாகவும், மலைகளின் திரளைப் போலப் பெரிதாகவும், செவ்வஞ்சனம் போல் கரியதாகவும், வலுவான மற்றும் நன்கு பதப்படுத்தப்பட்ட இரும்பினால் செய்யப்பட்டதாகவும் இருந்தது. அதற்கு எட்டுச் சக்கரங்களும், அச்சுகளும், கூபரங்களும் இருந்தன, நெருப்பின் கங்கு போலக் கரியதாக அஃது இருந்தது. அதன் ஒலி பெருங்கடலின் முழக்கத்தைப் போன்றிருந்தது,(8,9) அதன் சாளரங்கள் இரும்பு வலைகளால் மறைக்கப்பட்டிருந்தன. இரும்பாலான பரிகங்கள், க்ஷேபணீயங்கள், தண்டங்கள், பராசங்கள், கதாயுதங்கள், மரத்தாலான பல்வேறு ஆயுதங்கள் {முத்கரங்கள்}, தோமரங்கள், பரஸ்வதங்கள் ஆகியவற்றையும் அது கொண்டிருந்தது.(10,11) அது பகைவர்களுக்குப் பயங்கரத்தை அளித்தது, மந்தர மலை போன்று பேரளவைக் கொண்ட ஓராயிரம் கோவேறு கழுதைகளால் அஃது இழுக்கப்பட்டது. அதன் கொடியில் காக்கைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.(12)

[2] மூலத்தில் "க்ரோஸ விஸ்தாரம்" என்றிருக்கிறது. ஒரு குரோசம் என்பது இரண்டு மைல்கள் தொலைவாகும். நான்கு குரோசங்கள் சேர்ந்தது ஒரு யோஜனையாகும்.

விரோசனன், பெருஞ்சீற்றத்துடன் ஒரு தண்டத்தை எடுத்துக் கொண்டு, ஒளிரும் சிகரங்களுடன் கூடிய ஒரு மலையைப் போன்று படைக்கு முன்னால் நின்றான்.(13) பகைவரின் படைகளை ஒடுக்குபவனான தானவன் ஹயக்ரீவன், ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்ட ஒரு தேரைச் செலுத்தத் தொடங்கினான்.(14) தானவன் வராஹன், பல்லாயிரம் முழம் அளவுள்ள தன் பெரும் வில்லை வளைத்துக் கொண்டு, கிளைகளுடன் கூடிய ஓர் அரச மரத்தைப் போலப் படைக்கு முன்னால் நின்றான்.(15) தானவன் கரன், செருக்கில் ஏற்பட்ட கோபத்தால் கண்ணீர் சிந்தி, உதடுகளும், பற்களும் நடுங்கப் போருக்காக நின்று கொண்டிருந்தான்.(16) தானவன் வியூஹங்களால் சூழப்பட்ட சக்திமிக்க அரிஷ்டன், பனிரெண்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட ஒரு தேரில் ஏறி போர்களத்தில் திரியத் தொடங்கினான்[3].(17)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "துவஷ்டன் என்ற பெயரைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான மற்றொரு அசுரன், பதினெட்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் ஏறி, அசுரத் தரப்பு போர் உத்திகளைத் திட்டமிடுவதில் இறங்கினான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "தானவன் துவஷ்டன், பதினெட்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட தென் தேரில் இருந்தான். அந்த வீரமிக்கவன், தானவர்களுக்கான போர் வியூகங்களை வடிவமைத்துக் கொண்டிருந்தான்" என்றிருக்கிறது.

விப்ரசித்தியின் மகனான ஸ்வேதன், தங்கக் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனாக, ஒரு வெண்மலையைப் போலப் போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான்.(18) பலியின் மகனான அரிஷ்டன், கல்லாலான மிகச் சிறந்த ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு ஒரு மலையைப் போலப் போரில் நின்று கொண்டிருந்தான்.(19) கிஷோரன் என்ற பெயர் கொண்டவனும், செருக்குக் கொண்ட ஓர் இளம் குதிரையைப் போன்றவனுமான ஒரு தானவன், தைத்திய படைக்கு மத்தியில் சூரியனைப் போலத் தோன்றினான்.(20) தானவன் லம்பன், மேகத்திற்கு ஒப்பான நீண்ட உடுப்பை உடுத்திக் கொண்டு, தைத்திய வியூகங்களுக்கு[4] மத்தியில் ராகுவால் பீடிக்கப்பட்ட சூரியனைப்[5] போலத் தோன்றினான்.(21) பேருடல் படைத்தவனும், பயங்கரப் போர்வீரனுமான ஸ்வர்ப்பானு, பற்கள், உதடுகள் மற்றும் கண்களின் வடிவிலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புன்னகைத்தவாறே தைத்தியர்களின் முன்பு நின்றான்.(22)

[4] "நெடுவரிசை, வட்டம் மற்றும் கலப்பு வகைகளில் துருப்புகளை அணிவகுக்கச் செய்யும் பல்வேறு நிலைகள் வியூகங்கள் என்றழைக்கப்படும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] "இது சூரிய கிரகணம் குறித்த ஒரு புராதனக் கதை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

சிலர் குதிரைகளிலும், வேறு சிலர் யானைகளிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் சிங்கங்கள் மற்றும் புலிகளின் மீதும், வேறு சிலர் பன்றிகள் மற்றும் கரடிகள் மீதும் அமர்ந்திருந்தனர்.(23) சிலர் கழுதைகள் மற்றும் ஒட்டகங்களையும் வேறு சிலர் மேகங்களையும் செலுத்திக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் பல்வேறு பறவைகளையும், சிலர் காற்றுகளையும்[6] செலுத்திக் கொண்டிருந்தனர்.(24) சில தைத்தியர்கள் நடந்து சென்றனர். சில தைத்தியர்ங்கள் பயங்கரமான முகங்களைக் கொண்டிருந்தனர். ஒற்றைக் காலைக் கொண்ட சிலரும், இரண்டு கால்களைக் கொண்ட வேறு சிலரும் போருக்காக ஆடத் தொடங்கினர்.(25) சிலர் தங்கள் தோள்களைத் தட்டிக் கொண்டனர். இவ்வாறு முன்னணி தானவர்கள், செருக்குமிக்கப் புலிகளைப் போல முழங்கத் தொடங்கினர்.(26)

[6] "அஃதாவது அவர்கள் காற்றைப் போன்ற வேகம் கொண்டவர்களாக இருந்தனர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

வில்லைப் பயன்படுத்துவதில் திறன்மிக்கத் தைத்தியர்கள், கடுமையான தண்டங்கள், பரிகங்கள் மற்றும் பரிகங்களைப் போன்ற தங்கள் கைகளினால் தேவர்களைத் தாக்கத் தொடங்கினர்.(27) கதாயுதங்கள், பராசங்கள், அங்குசங்கள், வாள்கள், சதக்னிகள், கூர்த்தீட்டப்பட்ட குத்துவாள்கள், சிறந்த இரும்பினாலான பரிகங்கள் மற்றும் சக்கரங்களைக் கொண்டு விளையாடியபடியே படைவீரர்களைத் திளைக்கச் செய்தனர்.(28,29) போரில் தடுக்கப்பட முடியாதவர்களான தானவர்கள் வெற்றியை விரும்பினார்கள். இவ்வாறு, தாங்கள் கொண்ட பல்வேறு ஆயுதங்களினால் செருக்கடைந்திருந்த தானவர்கள், மேகங்கள் எழுவதைப் போலத் தேவர்களை எதிர்கொண்டனர்.(30) ஆயிரக்கணக்கான தானவர்களைக் கொண்டதும், காற்று, நெருப்பு, மேகம் மற்றும் மலைக்கு ஒப்பானதும், போர்வேகம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டதுமான அந்தத் தைத்திய படை, போராசையால் பித்துப் பிடித்திருந்தது" என்றார் {வைசம்பாயனர்}.(31)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 43ல் உள்ள சுலோகங்கள் : 31
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்