Monday 20 December 2021

பௌண்டரகனும் நாரதரும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 67

(பௌண்ட்ரகநாரதஸம்வாதம்)

Paundraka Narada Conversation | Bhavishya-Parva-Chapter-67 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: நாரதரிடம் பேசிய பௌண்டரகன்; பௌண்டரகனை எச்சரித்த நாரதர்...

Paundraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதே வேளையில் சர்வலோகங்களில் பயணிக்க வல்ல நாரதர், கைலாச சிகரத்தில் இருந்து, பௌண்டரகனின் நகரத்திற்குச் சென்றார்.(1) அவர் வானத்தில் இருந்து இறங்கி, மன்னனின் {பௌண்டரகனின்} வாயிற்காப்போனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவனது அரண்மனைக்குள் பிரவேசித்தார்.(2) அர்க்கியம் மற்றும் பிற மங்கலப் பொருட்களுடன் மன்னனால் மதிக்கப்பட்டு, தொண்டாற்றப்பட்ட அவர், அதன்பிறகு அலங்காரத் துணிகளால் மறைக்கப்பட்ட வெண்மையான ஆசனத்தில் அமர்ந்தார்.(3)

அப்போது ஆற்றலில் அதீத செருக்குக் கொண்ட பௌண்டரகன், முதலில் நாரதரின் நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு பின்வருமாறு பேசினான்:(4) "விப்ரேந்திரரே, நாரதரே, சர்வ காரியங்களிலும் பண்டிதரே, தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரே, எங்கும் தடையில்லாமல் சர்வலோகங்களுக்கும் செல்லவல்லவரே, பலமிக்கவனும், புகழ்மிக்கவனுமான பௌண்டரகனாகிய நான் வாசுதேவன் என்ற பெயருக்குத் தகாதவனா?(5-7)

சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகிய அடையாளங்களால் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய வாளையும், கேடயத்தையும் கொண்டு சிங்கம் போன்ற மன்னர்கள் பலரை நான் வென்றிருக்கிறேன். அனைவரின் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நானே கொடுக்கிறேன்.(8) ஒப்பற்ற ராஜ்ய போகம் கொண்டவனாகவும், ஒப்பற்ற ஆற்றலுடன் ஆளும் வலிமைமிக்க மன்னனாகவும் நான் இருக்கிறேன். வெல்லப்படமுடியாதவனான நான் என் குடிமக்களைப் பாதுகாக்க வல்லவனாகவும் இருக்கிறேன்.(9)

இப்போது வாசுதேவன் என்ற பெயரில் ஓர் இடையன் இருக்கிறான். எனினும் அவன் அந்தப் பெயரைக் கொள்வதற்குப் போதுமான ஆற்றலைக் கொண்டவனல்ல என நான் கருதுகிறேன்.(10) விப்ரேந்திரரே, அந்த இடையன் மூடத்தனத்தால் என் பெயரைப் பயன்படுத்துகிறான். இவ்வுலகில் சச்சரவின்றி நானே வாசுதேவனாக இருக்க அந்த யாதவனை நிச்சயம் வீழ்த்துவேன். என் சொற்களைக் குறித்து வைத்துக் கொள்வீராக. விருஷ்ணி குலத்தவர் அனைவரையும் வீழ்த்தி, கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை நான் அழிப்பேன். இந்தப் படையெடுப்பில் எனக்குத் துணை புரியும் விருப்பத்தை உறுதி செய்வதற்காக வலிமைமிக்க மன்னர்கள் பலர் இங்கே கூடியிருப்பதை நீர் காணலாம்.(11-13)

என்னிடம் வேகமான குதிரைகள் எண்ணற்றவையும், காற்றைவிட வேகமாகச் செல்லும் ரதங்களும், மதங்கொண்ட யானைகள், ஒட்டகங்கள் ஆகியவை கோடிக்கணக்கிலும் இருக்கின்றன. விப்ரரே, நாரதரே, நீர் செல்லும் இடமெங்கும் என் எண்ணத்தைக் குறித்துச் சொல்வீராக. இந்திரனின் சபையிலும் என்னுடைய ஒப்பற்ற ஆற்றலைச் சொல்லி நீர் துதிப்பீராக. இதுவே எனது வேண்டுகோளாகும். நான் உம்மை வணங்குகிறேன்" {என்றான் பௌண்டரகன்}.(14-16)

அப்போது நாரதர் {பௌண்டரகனிடம்}, "மன்னா, அண்டத்திற்குள் எங்கும் என்னால் செல்ல முடியும் என்பது உண்மைதான். என்னால் நிறைவேற்ற முடியாத பணியென ஏதும் கிடையாது.(17) எனினும், நீ விரும்பியபடி நான் எவ்வாறு பேசத்துணிவேன்? தேவேசனும், சக்கரபாணியும், ஜனார்த்தனனும், விஷ்ணுவுமான அந்தத் தேவன் துஷ்டர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் கொல்லும் வரை அவனைத் தவிர வேறு எவனை வாசுதேவனென அழைக்க முடியும்?(18,19) சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்படும் உலகங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் ஆளும்வரை, "பௌண்டரகன்தான் வாசுதேவன்" என எவன் சொல்லத் துணிவான்?

உன்னைப் போன்ற மூடனால் மட்டுமே இவ்வாறு பேச முடியும்.(20) அண்டத்திற்குள் எங்கும் திரிய வல்லவனும், சிந்தனைக்கு அப்பாற்பட்டவனும், ஆறு செல்வங்கள்[1] நிறைந்தவனும், பாவங்களை அழிப்பவனும், வில்லும், கதாயுதமும் தரிப்பவனும், நீக்கமற எங்கும் நிறைந்தவனுமான அந்த விஷ்ணு விரைவில் உன் செருக்கை அழிப்பான்.(21) மன்னா, ஆதிதேவனான கிருஷ்ணன் உன் கர்வத்தைக் கலங்கடிப்பான். நீ நினைப்பதும், செய்வதும் அனைத்தும் நகைப்பிற்குரியனவாகும். உன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு கிருஷ்ணனின் வலிமைமிக்க வில்லையும், வாளையும் அழிக்க இயலாது. உன்னை நீயே நகைப்பிற்குரியவனாக்கிக் கொள்கிறாய்" {என்றார் நாரதர்}".(22,23) 

[1] வலிமை {வீரியம்}, புகழ், ஞானம், வைராக்யம், அழகு, துறவு ஆகியவையே கிருஷ்ணனின்  வற்றாத நிறைந்த செல்வங்கள் / குணங்கள் ஆறு என்று சொல்லப்படுகின்றன.

பவிஷ்ய பர்வம் பகுதி – 67ல் உள்ள சுலோகங்கள் : 23

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்