Tuesday 19 May 2020

நாராயணனின் குணங்கள் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 49

(லோக வர்ணனம்)

Attributes of Narayana | Harivamsha-Parva-Chapter-49 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனின் இயல்புகளை விவரித்த வைசம்பாயனர்; பிரம்மலோகத்தில் நடைபெறும் வேள்வியில் ரிஷிகள் தன்னை வழிபடப்படுவதைக் கண்ட நாராயணன்; விஷ்ணுவைத் துதித்த தேவர்களும், ரிஷிகளும்...

Yajna avatar of Lord Vishnu

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, தேவர்களின் தேவனான வைகுண்டன், நீரில் பிறந்த பிரம்மனுடன் அவனது உலகிற்கு {பிரம்மலோகத்திற்குச்} சென்ற பிறகு என்ன செய்தான்?(1) தைத்தியர்களின் படுகொலை நிறைவடைந்தபின், நீரில் பிறந்த தேவன், தேவர்களால் கௌரவிக்கப்படும் விஷ்ணுவைத் தன்னுலகிற்கு ஏன் அழைத்துச் சென்றான்.(2) உயிரினங்களைப் படைப்பவனான தலைவன் பிரம்மன் என்ன வகை யோகத்தைச் செய்கிறான்? என்ன வகைக் கட்டுப்பாடுகளை நோற்கிறான்? பிரம்மனின் உலகம் எவ்வகையானது?(3) அவன் இங்கே இல்லாதபோது, {பிரம்மலோகத்தில் இருக்கும்போது}, தேவர்களாலும், அசுரர்களாலும் துதிக்கப்படும் வகையில் இந்தப் பேரண்டம் எவ்வாறு செழிப்படைகிறது?(4) கோடையின் முடிவில் அவன் ஓய்வெடுத்துக் கிடப்பதும், மழை அணுகுகையில் விழித்தெழுவதும் எவ்வாறு? உலகின் பணியைச் செய்து கொண்டே அவன் பிரம்மலோகத்தில் எவ்வாறு வாழ்ந்தான்?(5) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {விப்ரேந்திரரே}, தேவர்களின் நிலத்தில் இந்தத் தலைவனின் தெய்வீக ஒழுக்கத்தை உண்மையில் நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாராயணன், பிரம்மனின் உலகதிற்குச் சென்ற பிறகு அவனுடன் {பிரம்மனுடன்} விளையாடியதெவ்வாறு என்பதைக் கேட்பதற்கு முன், அவனுடைய செயல்களை இப்போது விரிவாகக் கேட்பாயாக.(7) அவனது விருப்பத்திற்கு ஏற்ப அமையும் அவனது மிக நுட்பமான போக்கைத் தேவர்களாலும் அறிந்து கொள்ள முடியாது. ஓ! மன்னா, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(8) இந்தத் தலைவன் நாராயணன், மூவுலகங்களுக்கு ஒப்பானவனாவான் {அவனே மூவுலகங்களாகவும் இருக்கிறான்}. மேலும் அந்த மூன்று உலகங்களும் அவனால் ஊடுருவப்பட்டிருக்கின்றன. அவன் சொர்க்கத்தின் தேவர்களுக்கு ஒப்பானவன் {அவனே தேவர்களாக இருக்கிறான்}, அவர்களும் அவனுக்கு ஒப்பானவர்கள்.(9) உலகின் மறு எல்லைக்குச் செல்ல விரும்பும் மனிதர்கள் பலராலும் அவனது எல்லையைக் காண முடியாது. இந்த மாதவனே அனைத்தின் எல்லையாக இருக்கிறான்.(10) இருளில் இருப்பதைப் போலப் புலன்களால் உண்மை வடிவம் மறைக்கப்பட்டதும், தேவர்கள் நாடுவதுமான பிரம்மலோகத்தில், அவன் பழங்காலத்தில் செய்த செயல்களைக் கேட்பாயாக.(11)

பிரம்மலோகத்திற்குச் சென்று, பெரும்பாட்டனின் மேன்மையைக் கண்ட விஷ்ணு, வேதங்களால் அனுமதிக்கப்பட்ட படைப்புகளுடன், ரிஷிகள் அனைவரையும் கௌரவித்தான்.(12) பெருஞ்சக்தி கொண்டவனான விஷ்ணு, பகலின் முதல் பகுதிக்கான சடங்குகளைச் செய்து, காலையில் பெரும் முனிவர்களால் பலியுணவுகள் {ஆகுதிகள்} காணிக்கையளிக்கப்படும் நெருப்பிடம் {அக்னியிடம்} வந்தான்.(13) அவன், தன் உடலானது, வேள்விக்கு மத்தியில் மிகச் சிறப்பாக இருப்பதையும், பலியுணவுகளுடன் பெரும் முனிவர்களால் வழிபடப்படுவதையும், வேள்விக் காணிக்கைகளில் தன் பங்கை உண்பதையும் கண்டான்.(14) எண்ணத்தால் புரிந்து கொள்ளப்படுவதற்கு அப்பாற்பட்டவனான நாராயணன், பிரம்மசக்தியுடன் கூடியவர்களும், வழிபடத்தகுந்தவர்களுமான ரிஷிகளை வணங்கி, நித்தியமான பிரம்மலோகத்தில் திரியத் தொடங்கினான்.(15)

அங்கே வேள்வியில் உலவிக் கொண்டிருந்த அவன், சஷாலங்களால்[1] உச்சிப் பகுதிகள் அலங்கரிக்கப்பட்டவையும், பிராமண முனிவர்களால் குறிக்கப்பட்டவையுமான நூற்றுக்கணக்கான வேள்வித்தம்பங்களை {யூபங்களைக்} கண்டான்.(16) அவன், பலியுணவுகளின் புகையை நுகர்ந்தும், இருபிறப்பாளர்களால் ஓதப்படும் வேதங்களின் ஒலியைக் கேட்டும், வேள்வியின் வடிவில் தானே வழிபடப்படுவதைக் கண்டும், அங்கே திரிந்து கொண்டிருந்தான்.(17) சபையின் தேவர்களும், ரிஷிகளும் தங்கள் கரங்களில் புனிதப் புல்லையும், அர்க்கியத்தையும்[2] எடுத்துக் கொண்டு,(18) "தேவர்களிடம் உள்ள எந்தச் சக்தியும் நாராயணனிடம் இருந்தே வெளிப்படுகிறது, தேவர்களால் செய்யப்படும் எதுவும் மதுசூதனனிடம் இருந்தே வருகிறது.(19) கல்விமான்களிடம் இருந்து மக்கள் கேட்கும் சோமன் மற்றும் நெருப்பின் {அக்னியின்} உலகங்களாக அந்த நித்திய விஷ்ணுவே இருக்கிறான்.(20) பாலில் இருந்து தயிரும், தயிரிலிருந்து தெளிந்த நெய்யும் உண்டாவதைப் போலவே, தியானத்தினால் உடலும், புலன்களும் கலங்கும்போது, ஜனார்த்தனனிடமிருந்து உலகம் உண்டாகிறது[3].(21) புலன்களாலும், ஐம்பெரும் பூதங்களாலும் அறிந்து கொள்ளப்படும் பேரான்மாவைப் போலவே, இந்த ஹரியும் தேவர்களாலும், வேதங்களாலும், உலகங்கள் அனைத்தாலும் அறிந்து கொள்ளப்படுகிறான்.(22) மனிதர்களின் உலகில் ஐம்பூதங்கள் மற்றும் புலன்களுக்கிடையிலான உறவு உணரப்படுவதைப் போலவே தேவலோகத்தில் தேவர்களின் பலமும், செழிப்பும் விஷ்ணுவிடம் இருந்து உண்டாகிறது.(23) எதையும் சாராதவனும், பெரும்புனிதனும், உலகங்களின் {உலகங்களை இணைக்கும்} சரடாக இருப்பவனும், வேள்விகளைச் செய்வோருக்கு, அவற்றின் பலன்களை அளிப்பவனும், மந்திரங்களையே போன்றவனுமான நாராயணன், அந்த மந்திரங்களாலேயே வழிபடப்படுகிறான்" என்றனர்.(24)

[1] "மரத்தாலானதும், வேள்வித்தம்பத்தின் உச்சியில் இருப்பதுமான ஒரு வளையமாகும்" என மன்மதநாததத்தல் இங்கே விளக்குகிறார்.


[2] "கால் கழுவதற்குரிய நீர்" என மன்மதநாததத்தல் இங்கே விளக்குகிறார்.


[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "பாலில் இருந்து தயிரும், கடைந்த தயிரிலிருந்து வெண்ணையும் எவ்வாறு வருகின்றனவோ அவ்வாறே இந்த அண்டமும் நெருப்பு மற்றும் சோமனில் இருந்து கடைந்த கழிவாகும், மேலும் இவை அனைத்தும் எல்லாம்வல்லவனிடம் இருந்து கடைந்தெடுக்கப்பட்ட கழிவுகள் என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள்" என்றிருக்கிறது.


ரிஷிகள், "ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே, ஓ! தாமரை உந்தி தேவா, சுகமாக வந்தாயா? மந்திரங்களுக்கு இணக்கமாக வழங்கப்படும் இந்த வேள்விக் காணிக்கையை ஏற்றுக் கொள்வாயாக.(25) வேள்வியில் புனிதப்படுத்தப்பட்ட இந்நீரின் புனிதக் கொள்ளிடம் நீயே. மந்திரங்களில் குறிப்பிடப்படும் விருந்தினனாக எப்போதும் அறியப்படும் நீ இப்போது புலப்படுகிறவனாக  வந்திருக்கிறாய்.(26) ஓ! நாராயணா, விஷ்ணு இல்லாமல் எந்த வேள்விக்கும் ஒருபோதும் அனுமதியில்லை என்பதால், நீ போர்க்களத்திற்குப் புறப்பட்டதும் எங்கள் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.(27) இன்று கொடைகளுடன் கொண்டாடப்படும் வேள்வியின் பலனை நாங்கள் அடையப் போகிறோம். எங்கள் அனைவராலும் நீ வழிபடப்படுவதை நீயே காண்கிறாய்" என்றனர்.(28)

அந்தத் தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, பதிலுக்குப் பிராமணர்களை வழிபட்டான். தன்னுலகில் இருந்த பெரும்பாட்டன் பிரம்மன், இதனால் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்" என்றார்{வைசம்பாயனர்}.(29)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 49ல் உள்ள சுலோகங்கள் : 29
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English