Sunday 4 July 2021

தைத்திய நரசிம்மப் போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 38அ

(ந்ருஸிம்ஹஸ்யோபரி தைத்யாநாம் ஷஸ்த்ராஸ்த்ரபாத꞉)

Daityas fight with Narasimha| Bhavishya-Parva-Chapter-38a | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹிரண்யகசிபு பயன்படுத்தி ஆயுதங்கள்; தானவ தைத்திய படைக்கும் நரசிங்கனுக்கும் இடையில் நடைபெற்ற போர்...

Lord Narasimha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தானவர்களின் தலைவனான ஹிரண்யகசிபு, பிரஹ்லாதன் சொன்ன சொற்களைக் கேட்டு தானவகணங்களிடம்,(1) "இதுவரை காணப்படாத உடலைக் கொண்ட இந்த மிருகேந்திரனை {நரசிம்மனைப்} பிடிப்பீராக. உங்களுக்கு ஐயமேதும் ஏற்பட்டால் வனத்தில் திரிபவனான இவனைக் கொல்வீராக" என்றான்.(2)

இந்தச் சொற்களைக் கேட்ட தானவர்கள் அனைவரும் அந்த மிருகேந்திரனைச் சூழ்ந்து கொண்டு அவனை நடுக்கமடையச் செய்வதற்கு முயன்றனர்.(3) பெருஞ்சக்திவாய்ந்த அந்தச் சிங்கமானவன், காலனைப் போன்று வாயைத் திறந்து சிங்கமுழக்கம் செய்து அந்த அழகிய சபாமண்டபத்தைச் சிதறடித்தான்.(4)

சபாமண்டபம் நொறுக்கப்பட்டதைக் கண்ட ஹிரண்யகசிபு, கோபத்தால் எரியும் கண்களுடன் தானே அந்தச் சிங்கத்தை நோக்கி கணைகளை ஏவினான்.(5) ஆயுதங்கள் அனைத்திலும் சிறந்த தண்டமாஸ்த்திரம், பேரச்சத்தை விளைவிக்கும் மிகப் பயங்கரமான காலச்சக்கரம், விஷ்ணு சக்கரம்,(6) தர்மச்சக்கரம், வெல்லப்பட முடியாதது என்ற பெயரைக் கொண்ட மஹாசக்கரம், சக்கரமைந்தரம் {இந்திரச்சக்கரம்}, மிகப் பயங்கரமான ரிஷிசக்கரம்,(7) மூவுலகங்களின் பேரொலியைக் கொண்ட பிதாமஹனின் {பெரும்பாட்டனின்} சக்கரம், விசித்திர மின்னல், உலர்ந்த மின்னல், ஈர மின்னல்,(8) பயங்கரமான சூலம், கங்காலம் என்றழைக்கப்படும் முசலம், பிரம்மசிரம், பிரம்மாஸ்திரம்,(9) ஐஷிகமாஸ்த்திரம் {நாணல் ஆயுதம்}, ஐந்திராஸ்த்திரம் {இந்திரனின் ஆயுதம்}, ஆக்நேயம் {அக்னியின் ஆயுதம்}, சிசிரம் {குளிரச் செய்யும் ஆயுதம்}, வாயவ்யம் {காற்றாயுதம்}, மதனம், காபாலம் {மண்டையோட்டு ஆயுதம்}, கிங்கரம்,(10) சாபிரதிமம், ஒடுக்கப்பட முடியாத சக்தியாஸ்த்திரம், கிரௌஞ்சமாஸ்த்திரம், ஹயஷீரம் {குதிரைத்தலை ஆயுதம்}, சௌம்யாஸ்த்திரம்,(11) கட்டற்ற பைசாசமாஸ்த்திரம், சார்ப்பியமாஸ்த்திரம் {பாம்பு ஆயுதம்}, மோஹனாஸ்த்திரம் {மயக்கமடையச் செய்யும் ஆயுதம்}, ஸோஷணம் {மெலிவடையச் செய்யும் ஆயுதம்}, ஸம்தமனம் {வெப்பமடையச் செய்யும் ஆயுதம்}, விலாபனம் {அழச்செய்யும் ஆயுதம்},(12) ஜிரும்பணம் {கொட்டாவிடச் செய்யும் ஆயுதம்}, பிராபணம், மிகப் பயங்கரமான துவாஷ்ட்ரம், ஸுதாருணம், காலமுத்கரம், பெருஞ்சக்திவாய்ந்த ஆயுதமான க்ஷோபணம்,(13) சம்வர்த்தனம், மோஹனம் {மயக்கமடையச் செய்யும் ஆயுதம்}, மாயாதரம், காந்தர்வமாஸ்த்திரம், வாள்களின் ரத்தினமான நந்தகம்,(14) பிரஸ்வாபனம், பிரமதனம், ஆயுதங்களில் சிறந்த வாருணம், தடையில்லாமல் எங்கும் செல்லவல்ல பாசுபதம்(15) ஆகிய ஆயுதங்கள் அனைத்தையும் யஞ்ஜத்தில் ஊற்றப்படும் ஆகுதிகளைப் போல அந்த நரசிம்மனின் மீது ஹிரண்யகசிபு ஏவினான்.(16)

கோடை காலத்தில் எரியும் கதிர்களால் இமய மலையை மறைக்கும் விவஸ்வானை {சூரியனைப்} போல அந்த அசுரமன்னன் {ஹிரண்யகசிபு}, சுடர்மிக்க ஆயுதங்களால் அந்தச் சிங்கத்தை மறைத்தான்.(17) கோபம் எனும் காற்றால் வீசப்படும் பெருங்கடலாக இருந்த அந்தத் தைத்தியப்படை, பெருங்கடலில் மூழ்கும் மைநாக மலையைப் போல அந்தச் சிங்கத்தை மூழ்கடித்தது.(18) பிராசைகள் {கத்திகள்}, பாசங்கள் {கயிறுகள்}, சூலங்கள், கதாயுதங்கள், முசலங்கள், வஜ்ரங்கள், மின்னல், பாறைகள், பெரும் மரங்கள்,(19) முத்கரங்கள், கூடபாசங்கள், சூலங்கள், ஊகலங்கள் {மர தண்டங்கள்}, மலைகள், சதாக்னிகள், முட்களுடன் கூடிய தண்டங்கள், ஸுதாருணங்கள் {பயங்கரத் தண்டங்கள்}(20) ஆகியன அந்த ஹரியைக் கொல்வதற்காகச் சூழ்ந்திருந்த அனைவராலும் அவன் மீது வீசப்பட்டன. அந்த மஹாத்மாவுக்கு அவற்றினால் சிறு தீங்கும் நேரவில்லை.(21)

மஹேந்திரனின் வஜ்ராயுதத்துக்கு இணையான வேகம் கொண்ட தானவர்கள் பலர், தங்கள் கைகளில் பாசக்கயிறுகளுடனும், தயாராக இருந்த ஆயுதங்களுடனும், மூன்று தலை கொண்ட பன்னக மன்னர்களை {பாம்புகளைப்} போல அந்த நரசிங்கனைச் சூழ்ந்து நின்றனர்.(22) பொன்மாலைகளால் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டவர்களும், கரங்களிலும், உடல்களிலும் பல்வேறு வகைக் கங்கணங்களை அணிந்திருந்தவர்களுமான அவர்கள், அகன்று விரிந்த சிறகுகளுடன்கூடிய அன்னப்பறவைகளின் வரிசையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(23) வாயு தேவனின் காந்தியைக் கொண்ட தானவர்கள் சிலர், கைகளில் கேயூரங்கள் அணிந்தவர்களாக ஒளிமிக்கச் சூரியனுக்கு இணையாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(24)

தானவர்களால் ஏவப்பட்ட பேராயுதங்களால் சூழப்பட்டிருந்தவன் {நரசிம்மன்}, ஒருகணம் ஒளிரும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டும், மறுகணம் மழை மேகங்களைப் போல இருளடர்ந்தும் இருந்தான்.(25) தைத்திய கணங்களின் படையானது பயங்கர ஆயுதங்களைப் பொழிந்த போது, ஒளிமிக்கவனான அந்தத் தலைவன் {நரசிம்மன்}, இமய மலையைப் போல அசையாமல் இருந்தான்.(26) சுடர்மிக்க நெருப்பைப் போன்ற ஒளியுடைய திதியின் மகன்களில் நரசிம்ம வடிவில் இருந்த தலைவனால் எரிக்கப்பட்டவர்கள், பெருங்காற்றால் பொங்கி அடங்கும் பெருங்கடலின் பேரலைகளைப் போல பேரச்சத்தால் உடல் நடுங்கி நின்றனர்.(27) கோபத்தால் அங்கங்கள் எரிந்த மஹாசுரர்கள், நூற்றுக்கணக்கான விற்களைப் பயன்படுத்திக் காலாக்னியைப் போல ஒளிரும் கணைச் சரங்களைப் பெரும் வேகத்துடன் ஏவினர்" என்றார் {வைசம்பாயனர்}[1].(28)

[1] முதல் மூன்று ஸ்லோகங்கள் மட்டுமே மன்மதநாததத்தரின் பதிப்பில் 39ம் அத்தியாயத்தில் வருகின்றன. எஞ்சியவை அனைத்தும் சித்திரசாலை பதிப்பில் உள்ளவை. நிகழ்வுகளின் தொடர்ச்சிக்காக இந்த அத்தியாயத்தின் எண் 39 என்று ஆக்கப்படாமல் 38அ என்று ஆக்கப்படுகிறது.

பவிஷ்ய பர்வம் பகுதி – 38அவில் உள்ள சுலோகங்கள் : 28

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English