Tuesday 2 February 2021

கிருஷ்ணனின் ஆற்றல் | விஷ்ணு பர்வம் பகுதி – 172 – 116

(வாஸுதேவபராக்ரமவர்ணனம்)

Krishna's feats described | Vishnu-Parva-Chapter-172-116 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் அளவற்ற ஆற்றலையும், புகழையும் வரிசையாகச் சொன்ன வைசம்பாயனர்...


Janamejaya Vyasa and Vaishampayana

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, யதுகுலத்தில் முதன்மையானவனும், நுண்ணறிவுமிக்கவனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} ஒப்பற்ற செயல்களை மீண்டும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பெரும் பிரகாசம் கொண்டவரே, எண்ணற்றவையும், அற்புதம் நிறைந்தவையும், தெய்வீகமானவையும், சாதாரணமானவையுமான கிருஷ்ணனின் செயல்களைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தேன். ஓ! பாவமற்ற முனிவரே, அனைத்தையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(2,3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, உயரான்ம கிருஷ்ணனின் அற்புத அருஞ்செயல்கள் பலவற்றை நான் ஏற்கனவே உனக்குச் சொன்னேன், நீயும் மீண்டும் மீண்டும் அவற்றைக் கேட்டாய்.(4) ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, நான் அவற்றைப் பலமுறை சொன்னேன் என்றாலும் அவற்றை முடிப்பது சாத்தியமில்லை.(5) ஓ! பெரும் மன்னா, ஒப்பற்ற சக்தியைக் கொண்ட வாசுதேவனின் மகிமைமிக்கச் செயல்களைக் கேட்க நீ ஆவலாக இருக்கிறாய், என்னால் முடிந்த அளவுக்கு விளக்கிச் சொல்கிறேன். நான் அவற்றைத் தொடக்கத்தில் இருந்து சொல்கிறேன்.(6)

நுண்ணறிவுமிக்க யது மன்னன் கேசவன், துவாராவதியில் வசித்து வந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த பல நாடுகள் மீது படையெடுத்தான்.(7) அந்த நேரத்தில், யாதவர்களின் தவறுகளைத் தேடிக் கொண்டிருந்தவனும், விசக்ரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு தானவன் கொல்லப்பட்டான்.(8) பெருமைமிக்கக் கேசவன், பெருங்கடலின் படுகையில் அமைந்திருந்த பிராக்ஜோதிஷ நகருக்குச் சென்று தீயவனான நரகாசுரனைக் கொன்றான். மேலும் அவன் வாசவனையும் {இந்திரனையும்} வீழ்த்தி, அவனது பாரிஜாத மரத்தை அபகரித்தான்.(9) தெய்வீகனான வருணன் லோஹிதம் என்ற மடுவில் வைத்துக் கேசவனால் வெல்லப்பட்டான். காரூஷ மன்னன் தந்தவக்தரன் தக்கணத்தில் கொல்லப்பட்டான்.(10) நூறு குற்றங்களை இழைத்த சிசுபாலனும் அதன்பிறகு கொல்லப்பட்டான். ஓ! மன்னா, சங்கரனால் பாதுகாக்கப்பட்ட சோணிதபுரத்திற்குச் சென்ற மாதவன்,(11) ஆயிரம் கரங்களைக் கொண்டவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனும், பலியின் மகனுமான பாணனை வீழ்த்திவிட்டு அவனை உயிரோடு மட்டும் விட்டு வந்தான்.(12) அந்த உயரான்மாவால் மலைகளில் இருந்த நெருப்புகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டன {அக்னி தேவன் வீழ்த்தப்பட்டான்}, சௌபம் {சால்வனின் தேரான சௌபம்} அவனால் வீழ்த்தப்பட்டது, சால்வனும் கொல்லப்பட்டான்.(13) ஜனார்த்தனன் பெருங்கடலைக் கலங்கடித்துப் பாஞ்சஜன்ய சங்கை அங்கிருந்து பெற்றான், ஹயக்ரீவனும், பெருஞ்சக்திவாய்ந்த பிற மன்னர்களும் அவனால் கொல்லப்பட்டனர்.(14)

அவன் மூலமாக ஜராசந்தன் கொல்லப்பட்டதும், {ஜராசந்தனிடம் சிறைபட்டிருந்த} மன்னர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவன் தனியனாகத் தேரில் சென்று மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, காந்தார மன்னனின் மகளை அபகரித்தான்.(15) நாட்டை இழந்து, துயரில் பீடிக்கப்பட்டிருந்த பாண்டுவின் மகன்கள் அவனால் பாதுகாக்கப்பட்டனர். சச்சியின் தலைவனுக்கு {இந்திரனுக்குச்} சொந்தமான காண்டவ வனத்தை எரித்து விட்டு,(16) நெருப்பால் {அக்னி தேவனால்} கொடுக்கப்பட்ட காண்டீவத்தை அர்ஜுனனுக்கு அவன் கொடுத்தான். ஓ! ஜனமேஜயா, பயங்கரம் நிறைந்த பெரும்போர் நடந்த போது இந்த யது மன்னன் ஜனார்த்தனன் தூதனாகச் செயல்பட்டான்.(17) {யாதவர்களின் தலைவனான கிருஷ்ணன், யாதவக் குலத்தைப் புகழடையச் செய்தான்}. அவன் பாண்டவர்களின் சார்பில் இருந்து, குந்தியின் முன்னிலையில், பின்வருமாறு உறுதியேற்றான்.(18) "பாரதப் போர் முடிந்த பிறகு, உன் மகன்களிடம் அரசைத் திருப்பிக் கொடுப்பேன்" என்று அவன் உறுதிமொழி அளித்தான். பேரொளி கொண்ட நிருகன், சாபத்தில் இருந்து அவனால் விடுவிக்கப்பட்டான்,(19) நன்கறியப்பட்டவனான காலயவனன் போரில் கொல்லப்பட்டான். பெருஞ்சக்தி வாய்ந்தவர்களும், தடுக்கப்பட முடியாதவர்களுமான மைந்தன், திவிதன் என்ற குரங்குகள் போரில் வீழ்த்தப்பட்டனர்,(20) ஜாம்பவானும் வீழ்த்தப்பட்டான். சாந்திபினியின் மகனும், உன் தந்தையும் {அபிமன்யுவின் மகனான பரீக்ஷித்தும்} யமனால் பீடிக்கப்பட்டிருந்தாலும் உயிர் மீட்கப்பட்டனர்.(21) {பயங்கரமான மன்னர்களுக்கு அழிவை உண்டாக்கிய போர்கள் பலவற்றில் அவன் ஈடுபட்டான்}.(22) ஓ! ஜனமேஜயா, மனிதர்களுக்கு அழிவைத் தரும் போர்கள் பலவற்றில் மன்னர்கள் எவ்வாறு மரணம் அடைந்தனர் என்பதை உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்" என்றார் {வைசம்பாயனர்}.(23)

விஷ்ணு பர்வம் பகுதி – 172 – 116ல் உள்ள சுலோகங்கள் : 23
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English