Wednesday 5 May 2021

ஜனமேஜயன் கேள்வி | பவிஷ்ய பர்வம் பகுதி – 15

(ஜநமேஜயப்ரஷ்ந꞉)

Janamejaya's query | Bhavishya-Parva-Chapter-15 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்ம ஞானம் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்...


Janamejaya Vyasa and Vaishampayana

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, பெருமைமிக்கதும், சிறப்புமிக்கதுமான எங்கள் குல {வம்ச} விளக்கத்தை நான் கேட்டேன்.{1}

பல அறங்களையும், பல்வேறு சந்தங்களையும், தொடர்மொழிகளையும், குறுகியதாக இருந்தாலும் இனிய சொற்களையும் கொண்டிருந்தன, வாழ்வின் மூன்று நோக்கங்களைத் தரவல்லவையாகவும் அவை இருந்தன.{2,3}(1-3)

என் முன்னோர்கள், மன்னன் துரியோதனனுடன் உண்டான சச்சரவின் காரணமாகத் தங்கள் போட்டியாளர்களை வெல்வதற்காகவும், தங்கள் குல வழித்தோன்றல்களைக் கொல்வதற்காகவும், பிராமணர்களின் சக்தியையும், போர்வீரர்களின் ஆற்றலையும் அழிக்கத் தகுந்தவற்றைப் பயன்படுத்தவில்லை என நீர் விளக்கிச் சொன்னீர்.{4,5}

அந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்ட மன்னர்களின் வழித்தோன்றல்கள் தங்கள் தங்களுக்குரிய நாடுகளை அடைந்தனர் என்றும், தெய்வீகத் தலைவனின் உத்தரவைப் பின்பற்றுவதற்காகக் குருக்களின் மன்னன் உறுதியாக நிறுவப்பட்டான் என்றும் நீர் விளக்கிச் சொன்னீர்.{6}

ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, மூன்று வர்ணங்களின் கடமைகளையும், தெய்வக லோகத்தை ஒருவன் அடையக்கூடிய வழிமுறைகளையும் நீர் முறையாக விளக்கிச் சொன்னீர்; உயிரினங்களின் மீது கொண்ட கருணையால் நான்கு வர்ணங்களின் கடமைகளையும் நீர் பல வழிகளில் விளக்கிச் சொன்னீர்.{7,8}

கர்மத்தின் வீழ்ச்சியில் தெய்வீகம் ஆதிக்கம் செலுத்தும்போது சிலர் பிறப்பின் மூலம் இழிந்த நிலையை அடைகிறார்கள், சிலர் உயர்கிறார்கள் என்பதையும் விளக்கிச் சொன்னீர்.{9}

பணிவுடன் இருப்பதன் பயன்களைப் பல பகுதிகளாகப் பகுத்தும் சொன்னீர். கொடைகளின் பயன்கள், கர்மத்தின் பயன்கள் ஆகியவை தொடர்பாக நீர் சொன்ன சொற்கள் உண்மையில் இனிமையானவை.{10}

ஓ! மதிப்பிற்குரிய ஐயா, ஒரு தேவ நாளுக்குள் கூட {ஒரு வருடத்திற்குள் கூட} பாரதமென்னும் இந்தப் பெரும் வரலாற்றை என்னால் படிக்க முடியவில்லை.{11} ஆனால் ஐயா, பிரம்மத்துடன் ஐக்கியமாவதற்கான ஞானம் குறித்து உம்மிடம் சுருக்கமாகக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்" என்று கேட்டான்.{12}(4-12)

பவிஷ்ய பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 12

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English