Sunday 2 May 2021

பிரம்மனின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 14

(பிரஹ்மணோ மாநஸபுத்ராணாமுத்பத்தி)

Brahma's creation | Bhavishya-Parva-Chapter-14 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிரம்மனின் மானஸபுத்ரர்கள்; படைப்பு குறித்த விரிவான வர்ணனை...


Brahma's creation

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நீண்ட கைகளைக் கொண்டவனும், பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனுமான பிரம்மன், அந்தத் தாமரையில் அமர்ந்து, தன் கைகளை உயர்த்தியபடி கடுந்தவத்தைச் செய்தான்.{1} தன் சொந்த பிரகாசத்தில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த யோகியான பிரம்மன், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{2}

நித்தியனும், அழிவற்றவனுமான தலைவன் நாராயணன், பெருஞ்சக்திவாய்ந்த, சிறப்புமிக்க யோக ஆசானாகவும், பிரம்மவாதிகளில் முதன்மையானவரும், சாங்கிய தத்துவத்தை எடுத்துரைப்பவருமான கபிலராகவும் தன் உடலை இரண்டாகப் பகுத்துக் கொண்டு பிரம்மனை அணுகிறான்.{3} அளவற்ற ஆற்றலைக் கொண்டவரும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவரும், பிரம்மவாதிகளில் முதன்மையானவரும், க்ஷத்திரியர்களைப் போன்ற பணிகளில் ஈடுபடுபவரும், பெருஞ்சக்திவாய்ந்த யோகாசாரியரும், சாங்கியத்தை எடுத்துரைப்பவருமான கபிலரும் பிரம்மனின் அருகில் வந்து,{4,5} "ஓ! பிரம்மா, உயிரினங்கள் அனைத்தையும் ஆள்பவனாகவும், அண்டத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் நீ உயிரினங்களின் பெருக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், அண்டத்தை ஆதரிப்பவனாகவும், உலகத்தின் ஆசானாகவும், (எனவே) அனைவராலும் வழிபடத்தகுந்தவனாகவும் இருக்கிறாய்" என்றனர்.{6,7}(1-7)

அவர்களின் சொற்களைக் கேட்டு, பிரம்மஞானம் தொடர்பாக ஸ்ருதிகளில் கேட்டதைப் போன்ற மூன்று ஸ்லோகங்களைச் சொல்லி பிரம்மன் மூன்று உலகங்களையும் படைத்தான்.{8} தலைவன் பிரம்மன், மூவுலகங்களில் பூலோகத்தில் வசித்துக் கொண்டு, மனத்தில் பிறந்த நித்திய மகனைப் படைத்தான்.{9} மனத்தில் பிறந்த மகன், தான் பிறந்த உடனேயே பிரம்மனின் முன்பு நின்று, அவனிடம், "ஓ! தலைவா, நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? எனக்கு ஆணையிடுவாயாக" என்றான்.{10}

பிரம்மன், "ஓ! பெரும் மனம் கொண்டவனே, இந்தப் பிராமணர் கபிலரும், வரமளிக்கும் நாராயணனும் உன்னிடம் சொல்வதைச் செய்வாயாக" என்றான்".{11}(8-11)

வைசம்பாயனர், "பிரம்மன் இதைச் சொன்னதும், மனத்தில் பிறந்த மகன் அவனிடம், "என் தந்தையை விடப் பெரியவன் வேறு எவன்?" என்று கேட்டான். அவன் மீண்டும் ஐயத்தால் பீடிக்கப்பட்டவனாகக் கைகளைக் கூப்பிக் கொண்டு,{12) "நான்உனக்குத் தொண்டு செய்யத் தயாராக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும். நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்" என்றான்.{13}

யோகம் மற்றும் சாங்கியத்தின் பேராசிரியர்கள், "சிதைவில்லாத பிரம்மத்தின் பதினெட்டு வடிவங்களையும், நித்தியமான பெரும்பிரம்மத்தையும் நினைவுகூர்வாயாக" என்றனர். மனத்தில் பிறந்த மகன் இச்சொற்களைக் கேட்டுவிட்டு, வடக்கே சென்று ஞானத்தின் மூலம் பிரம்ம அறிவை அடைந்தான்.{14}(12-14)

அதன்பிறகு, உயர்ந்த மனம் கொண்ட தலைவன் பிரம்மன் இரண்டாவதாகப் புவர்லோகத்தைப் படைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தில் பிறந்த மகனைப் படைத்தான்.{15} மனத்தில் பிறந்த மகன், பிரம்மனின் ஆணையின்படி, பெரும்பாட்டன்கள், யோகசாங்கிய ஆசான்கள் ஆகியோரின் முன்பு தோன்றி, "நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுவீராக" என்றான்.{16} அதன்பிறகு அவன் அந்த இரண்டு ஆசான்களிடம் போகவதி பகுதிக்குச் சென்று, அவர்களின் அருகில் காத்திருந்து பெரும்லோகத்தை அடைந்தான்.{17}(15-17)

தலைவன் பிரம்மன், மனத்தில் பிறந்த அந்த மகன் புறப்பட்டுச் சென்ற பிறகு, மூன்றாவதாக முக்தியை அடையவல்ல பூர்புவலோகத்தைப் படைத்து, மூன்றாவதாக மனத்தில் பிறந்த மகனைப் படைத்தான்.{18} அதன்பிறகு பிரம்மனால் ஆணையிடப்பட்ட மனத்தில் பிறந்த மகன் அவர்களின் முன்பு தோன்றி அவர்களின் அறத்தையும், இயக்கங்களையும் அறிந்து கொண்டான். இந்த மூவரும் உயரான்ம சம்புவின் மகன்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.{19}(18,19) தலைவன் நாராயணனும், தவசிகளின் தலைவரான கபிலரும் தங்களுடன் அந்த மூன்று மகன்களையும் தங்கள் உலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.(20)

அவர்கள் சென்ற பிறகு எப்போதும் நோன்புகளை நோற்கும் பிரம்மன் மீண்டும் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.{21} தொடர்ந்து விடாமல் தனியாகத் தவம் செய்து கொண்டிருந்த தலைவன் பிரம்மன், தன்னுடைய பாதி உடலில் இருந்து அழகிய மனைவியைப் படைத்தான்.{22} பிரம்மன், உலகைப் படைக்கவல்லவளும், ஆன்ம சக்தி, பிரகாசம், தற்கட்டுப்பாடு ஆகியவற்றில் தனக்கு இணையானவளுமான அந்த மனைவியுடன் கலவி புரிந்து, தமஸ் குணத்தின் மூலம் ஊடுருவி, குடிமுதல்வர்கள், கடல்கள், ஆறுகள், வேதங்களின் தாயான புனித காயத்ரி மந்திரம், நான்கு வேதங்கள் ஆகியவற்றையும் படைத்தான்.{23,24} உலகின் படைப்பாளனான பெரும்பாட்டன் தன் பணியின் கருவிகளாக அண்டத்தின் தலைவர்களான மகன்களைப் படைத்தான். அந்தப் படைப்பில் இருந்து உலகங்கள் அனைத்தும் வெளிப்பட்டன.{26}(21-26)

அவன், ஆசிரமங்கள் அனைத்தையும் ஆதரிப்போரும், வரங்களை அளிப்போரும், பெருந்தவசிகளுமான விஷ்வேசன், தர்மன் ஆகிய இரு மகன்களை முதலில் படைத்தான், பிறகு,{27} தக்ஷன், மரீசி, அத்ரி, புலஸ்த்யர், புலஹர், கிரது, வஸிஷ்டர், கௌதமர், பிருகு, அங்கிரஸ் ஆகிய முனிவர்களையும், பிறரையும் படைத்தான்.{28} பிரம்மனால் படைக்கப்பட்ட மேற்கண்ட ரிஷிகளின் வழித்தோன்றல்களே அதர்வ வேதத்தின் பெரும் ரிஷிகளாக அறியப்பட்டனர்.{29} அதிதி, திதி, தநு, காலா, அதாயு, ஸிம்ஹிகை, முநி, பிரபோதை, ஸுரஸை, குரோதை, விநதை, கத்ரு ஆகிய பனிரெண்டு மகள்களையும், இருபத்தேழு நட்சத்திரங்களையும் தக்ஷன் பெற்றான்.{30,31} மரீசியின் மகனான கசியபர், தவத்தின் மூலம் சர்வ வல்லமை படைத்தவரானார். தக்ஷன் தன்னுடைய பனிரெண்டு கன்னிகையரை கசியபருக்குக் கொடுக்கச் சம்மதித்தான்.{32} ஓ! ஜனமேஜயா, பெரும் ரிஷியான தக்ஷன், ரோஹிணியையும், அறம் அளிக்கும் நட்சத்திரங்களையும் வசுக்களில் சோமனுக்கு அளித்தான்.{33}(27-33)

ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, அறம்சார்ந்தவனான பிரம்மன், தேவர்களில் முதன்மையான தர்மனுக்குத் தான் ஏற்கனவே படைத்து வைத்திருந்த லக்ஷ்மி, கீர்த்தி, ஸாத்யை, எப்போதும் நலம் புரியும் விஷ்வை, மருத்வதி ஆகிய மிகச்சிறந்த ஐந்து கன்னிகையரைக் கொடுத்தான்.{34,35} முடிவில், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவளும், பிரம்மனின் பாதி உடலில் இருந்து படைக்கப்பட்டவளுமான பிரம்மனின் மனைவி, சுரபி என்ற பசுவின் வடிவை ஏற்று அவன் முன்னிலையில் தோன்றினாள்.{36} ஓ! பாரதா, படைப்பின் காரணத்தை அறிந்தவனும், உலகால் துதிக்கப்படுபவனுமான பிரம்மன், பசுக்களைப் படைப்பதற்காக அவளை அறிந்தான்.{37} இதன் மூலம் அவன், மாலைநேர மேகம் போன்ற சிவந்த வண்ணம் கொண்டவர்களும், தங்கள் பயங்கரப் பிரகாசத்தால் அனைத்தையும் எரிக்கவல்லவர்களும், பக்திமான்களும், பேருடல் படைத்தவர்களுமான ஏழு மகன்களைப் பெற்றான்.{38} அவர்கள் பிறந்த உடனேயே அழுது கொண்டே பெரும்பாட்டனிடம் ஓடியதால் அவர்கள் ருத்ரர்கள் என்ற பெயரைப் பெற்றார்கள்.{39} நிர்ருதி, ஸர்பன், அஜன், ஏகபாத், மிருகவ்யாதன், பிநாகி, தஹநன், ஈஷ்வரன்,{40} அஹிர்புத்ந்யன், வெல்லப்பட முடியாத கபாலி, பெருஞ்சக்திவாய்ந்த ஸேநாநி ஆகியோர் பதினோரு ருத்திரர்களாக அறியப்படுகிறார்கள்.{41}(34-41)

சுரபியானவள், காளைகளையும், வேளாண்மையில் வளராத மரங்கள், அவரைகள், மண், ஆடுகள், மிகச் சிறந்த அமுதம், மருத்துவம் சார்ந்த மூலிகைகள் ஆகியவற்றைப் பெற்றாள்.{42} தர்மன், சுரபியிடம் லக்ஷ்மி, காமா ஆகியோரையும், ஸாத்யாவிடம் ஸாத்யாவையும் பெற்றான்.{43} பிரபவன், சிவனன், ஈசானன், சுரபி, ஆரண்யன் (காடு), மருத்தன், விஷ்வாவசு, மஹிஷன், தநூஜன், விஜ்ஞாதன், மநஸன்,{44,45} மத்ஸரன், விபூதி ஆகியோரும் சுரபியின் மகன்களாக அறியப்படுகின்றனர். சாத்யர்களின் உலகில் வழிபடப்படும் சாத்யனும் அதைத் தொடர்ந்து வாசவனும் மலைகளையும், பாம்புகளையும், காளைகளையும் பெற்றனர்.{46,47} தர்மன் சுசாமையிடம் முறையாக, மருதேவன், துருவன், விஷ்வாவசு, தலைவன் சோமன், பர்வதன், யோகேந்திரன், வாயு, நிகிருதி ஆகியோரைப் பெற்றான்.{48} தர்மன் விஷ்வையிடம் விஷ்வதேவர்களைப் பெற்றான் என்று கேள்விப்படுகிறோம். பெருங்கரங்களைக் கொண்ட ஸுதர்மன், பெருஞ்சக்திவாய்ந்த ஷங்கபன், உக்தன், வபுஷ்மான், விஷ்வாவசு, சுபர்வன், பெருஞ்சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கும்பு, சூரியனைப் போன்ற பெரும்பிரகாசம் கொண்ட ரிஷியின் மகனான ருரு ஆகியோர் சாக்ஷுஷ மனுவின் சந்ததிகளாகின்றனர்.{49-52} விஷ்வை விஷ்வதேவர்களைப் பெற்றாள். தர்மன் மருதவதியிடம் அக்னி, சாக்ஷன், ஹரி, ஜோதி, சாவித்ரி, மித்ரன், அமிருதன், பெருங்கரங்களைக் கொண்ட சங்ஷேபன், விரஜன், சுக்ரன், விஷ்வாவசு, விபாவசு, அஷ்மந்தன், சித்ரரஷ்மி, நிஜுதி, ஜயோனா அத்புதி, சாரித்ரன், பாஹுபன்னகன், பிறரின் பேராற்றலை வளர்க்கும் பிரஹத்பூதன் ஆகிய மருத்துகளைப் பெற்றான்.{53-56}(42-56)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதிதியிடம், இந்திரன், விஷ்ணு, பகன், துவஷ்டா, வருணன், அங்ஷன், அரமன், ரவி, பிஷன், மிதரன், வரங்கொடுக்கும் மனு, இந்திரன் என்ற மிக முக்கியமான பனிரெண்டு ஆதித்யர்களைப் பெற்றார்.{57,58} ஆதித்யன் சரஸ்வதியிடம் ரூபன், பலன் என்ற மிக அழகிய மகன்கள் இருவரைப் பெற்றான். திதி தைத்தியர்களையும், தனு தானவர்களையும் பெற்றனர்.{59} தானவர்கள், சுரவையிடம் ஊர்வனவற்றையும், காலையிடம் காலகேய அசுரர்களையும், ராட்சசர்களையும் பெற்றனர்.{60} ஓ! பரதனின் வழித்தோன்றலே, அனயுஷா நோய்கள் அனைத்தையும், பேரிடர்களையும் பெற்றாள். கோள்களின் அன்னையான சிம்ஹிகை, கந்தர்வர்களைப் பெற்றாள், பிராதை அப்சரஸ்களையும், குரோதை கணங்கள், பிசாசங்கள், யக்ஷர்கள், குஹ்யர்களையும், சுரபி, நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் அனைத்தையும் பெற்றனர். விந்தை அருணனையும், கருடனையும் பெற்றாள், கத்ரு பாம்புகள் அனைத்தையும் பெற்றாள்.{61-64}

ஓ! மன்னா, உயரான்ம பிரம்மன் தாமரையில் தோன்றியபோது விஷ்வதேவர்கள் இவ்வோறே தங்களைப் பெருக்கிக் கொண்டனர்.{65} தாமரையின் தோற்றம் குறித்த இந்தப் பழங்கதையைத் துவைபாயனரிடம் {வியாசரிடம்} இருந்து நாம் கேட்டோம். அந்தப் பெரும் ரிஷி தொடக்கம் முதல் முடிவு வரை அதை விவரித்தபோது பெரிதும் உயர்வாக மதித்துப் பேசினார்.{66} முதல் தாமரையின் தோற்றம் குறித்த இந்தக் கதையை எப்போதும் கவனத்துடன் படிக்கும் பெரும் மனிதன், இவ்வுலகில் துன்பம் அற்றவனாக, இம்மையில் பல்வேறு இன்பங்களை அனுபவித்து, மறுமையில் நித்திய அருளைப் பெறுவான்" என்றார் {வைசம்பாயனர்}".(57-67)

பவிஷ்ய பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 67

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English