Monday 21 December 2020

சபை புகுந்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 157 – 101

(கிருஷ்ணஸ்ய ஸபாப்ரவேஷம்)

Krishna invites a meeting of his kinsmen | Vishnu-Parva-Chapter-151-101 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வெற்றியைப் பறைசாற்றி அனைவரையும் கௌரவித்த கிருஷ்ணன்...


Krishna with Yadhavas in his Sabha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} கருடனைத் தன் நண்பனைப் போல மதித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச சென்றான்.(1) வானுலாவுபவனான அந்தப் பறவையானவன் {கருடன்} வாசுதேவனை வணங்கி விடைபெற்று வானத்தில் எழுந்தான்.(2) அந்நேரத்தில் அந்தப் பறவையானவன் தன் சிறகுகளை அடித்து உண்டான காற்றின் மூலம் மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலை மொத்தமாகக் கலக்கியபடியே கிழக்கு கடலை நோக்கிச் சென்றான்.(3)

அந்த வினதையின் மகன்(கருடன்}, "பணி நேரும் காலத்தில் மீண்டும் வருவேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றான். கிருஷ்ணன், முதியவனான தன் தந்தை ஆனகதுந்துபிக்கும் {வசுதேவனுக்கும்},(4) மன்னன் உக்ரசேனன், பலதேவன், சாத்யகி, சாந்தீபனி, பிராமணர் கார்க்கியர் ஆகியோருக்கும்,(5) விருஷ்ணி, அந்தக, போஜ குலங்களைச் சேர்ந்த பிறருக்கும் தன் ஆற்றலின் மூலம் அடைந்த ரத்தினங்களைக் கொடுத்தான்.(6)

"பிராமணர்களின் பகைவர்கள் கொல்லப்பட்டனர். மதுசூதனர் போர்க்களத்தில் இருந்து தீங்கேதுமின்றித் திரும்பிவிட்டார். விருஷ்ணிகளும், அந்தகர்களும் வெற்றியடைந்தனர்"(7) என்று காது குண்டலங்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்த தூதர்கள், துவாரகையின் குறுக்கு சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் பறைசாற்றி அறிவித்தனர்.(8)

சாந்தீபனியை முதலில் வணங்கிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அதன்பிறகு மன்னன் ஆஹுகனை {உக்ரசேனனை} பணிவுடன் வணங்கினான்.(9) ராமனுடன் {பலராமனுடன்} கூடியவனான வாசவனின் தம்பி {கிருஷ்ணன்}, கண்களில் கண்ணீருடன் மகிழ்ச்சியால் இதயம் நிறைந்திருந்த தன் தந்தையை வணங்கினான்.(10) அதன் பிறகு தாசார்ஹர்களை அணுகிய அதோக்ஷஜன் {கிருஷ்ணன்} அவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து அவர்கள் அனைவரையும் கௌரவித்தான்.(11) ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, பண்பட்டவையான இந்தப் பழக்கவழக்கங்களை வெளிக்காட்டியபிறகு, உபேந்திரனின் தலைமையிலான யாதவர்கள அனைவரும் அனைத்து வகை ரத்தினங்களும் பதிக்கப்பட்ட தெய்வீக அரியணைகளில் அமர்ந்தனர்.(12) அதன் பிறகு கிருஷ்ணனின் ஆணையின் பேரில் நரகனின் பணியாட்கள் {கிங்கரர்கள்} செல்வங்களையும், தங்களால் முன்பே கொண்டு வரப்பட்ட சபாமண்டபத்தையும் அங்கே கொண்டு வந்தனர்.(13) அப்போது யதுக்களில் முதன்மையான ஜனார்த்தனன், துந்துபி ஒலியை இசைத்துத் தாசார்ஹர்கள் அனைவரையும் கௌரவித்தான்.(14)

அதன்பிறகு, கிருஷ்ணனின் ஆணையின் பேரில், ரத்தினமயமான இருக்கைகளையும், வாயிலையும் கொண்ட அந்த அழகிய சபா மண்டபத்திற்குள் தாசார்ஹர்கள் நுழைந்தனர்.(15) முன்னணி யது தலைவர்களால் நிறைந்த அந்தச் சபா மண்டபமானது சிங்கங்கள் வசிக்கும் மலைக்குகைகளைப் போல அழகாகவும், சிறப்பாகவும் ஒளிர்ந்தது.(16) விருஷ்ணிகளாலும், போஜர்களாலும் பின்தொடரப்பட்ட கோவிந்தன் தன் முன் உக்ரசேனனை வைத்துக் கொண்டு ஒரு பெரும் தங்க இருக்கையில் ராமனுடன் அமர்ந்தான்.(17) புருஷர்களில் முதன்மையான அவன் {கிருஷ்ணன்}, வயதுக்கேற்ற வரிசையில் அங்கே அமர்ந்திருந்த யது குல தலைவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினான்" என்றார் {வைசம்பாயனர்}.(18)

விஷ்ணு பர்வம் பகுதி – 157 – 101ல் உள்ள சுலோகங்கள் : 18
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English