Friday 22 May 2020

தேவர் சபைக் கூட்டம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 52

(விஷ்ணும் ப்ரதி ப்ருதிவ்யா வாக்யம்)

The assembly of gods | Harivamsha-Parva-Chapter-52 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவர்களுடன் மேரு மலைக்குச் சென்ற நாராயணன்; விஷ்ணுவிடம் மன்றாடிய பூமாதேவி...

Lord Vishnu and Goddess Earth

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மேகத்தின் நிறத்தைக் கொண்டவனும், செவ்வையற்ற நாளில் அதன் {மேகத்தின்} முழக்கத்தைப் போன்ற குரலைக் கொண்டவனுமான தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, மேகங்களால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தேவர்களுடன் சென்றான்.(1) அந்நேரத்தில், கருநீல மேனியைக் கொண்ட ஹரி, சந்திரனுடன் கூடிய ஒரு மேகத்தைப் போல ரத்தினங்கள் மற்றும் முத்துக்கள் சூடிய ஒளிரும் சடாமுடியைத் தரித்தான்.(2) மயிர்கள் நிமிர்ந்து நிற்கும் அவனது அகன்ற மார்பில், ஸ்ரீவத்சம் எனும் மாயக்குறி இருந்தது.(3) உலகின் ஆசானான அந்த நித்திய ஹரி, இரண்டு துண்டுகளாக இருந்த மஞ்சள் உடையைச் சூடி, மாலைநேர மேகங்களால் மறைக்கப்பட்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(4) அவன், கருடனின் முதுகில் ஏறி செல்லத் தொடங்கியபோது, அவனில் கண்கள் நிலைத்திருந்த தேவர்களும், தாமரையில் பிறந்த தேவனும் (பிரம்மனும்) அவனைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.(5) ரத்தினங்கள் நிறைந்த அந்த மலையை உடனே அடைந்த அவர்கள், அங்கே தங்கள் இதயங்களால் {தங்கள் இதய விருப்பங்களின்படி} கட்டப்பட்ட சபா மண்டபத்தைக் கண்டனர்.(6)

சுமேரு மலையின் சிகரத்தில் கட்டப்பட்டிருந்த அது, சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தது. அதன் தூண்கள் தங்கத்தாலானவையாகவும், அதன் நுழைவாயில்கள் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டனவாகவும் இருந்தன.(7) மனத்தால் கட்டப்பட்ட அதனில் பல்வேறு ஓவியங்களும், நூற்றுக்கணக்கான தேர்களும் இருந்தன. அதன் சாளரங்கள் ரத்தினமயமான வலைகளால் மறைக்கப்பட்டிருந்தன. அது விரும்பிய எங்கும் செல்லவல்லதாகவும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது.(8) அது பலவகைப்பட்ட ரத்தினங்களாலும், பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட மலர்களாலும் நிறைந்திருந்தது. தெய்வீக மாயை நிறைந்த அந்தத் தெய்வீக சபா மண்டபம், விஷ்வகர்மனால்[1] கட்டப்பட்டதாகும்.(9) மகிழ்ச்சி நிறந்த மனங்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும், மங்கலமான அந்தச் சபா மண்டபத்தில் தங்கள் ஒவ்வொருவருக்கும் முறையாக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் சரியாக அமர்ந்தனர்.(10) தேர்கள், இருக்கைகள், பத்ராஸனங்கள்[2], பீடங்கள்[3] குத இருக்கைகள்[4] ஆகியவற்றில் அவர்கள் அமர்ந்தனர்.(11) அதன்பிறகு, பிரம்மனின் ஆணையின் பேரில் அங்கே எவ்வொலியும் எழாத வகையில் பிரபஞ்சனக் காற்றானது, அந்தச் சபா மண்டபத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சுற்றித் திரியத் தொடங்கியது.(12) அந்தத் தேவ சபையில் அனைத்தும் ஒலியற்று அமைதியாக இருந்தபோது, அவலநிலையில் இருந்த பூமியானவள், பரிதாபகரமான முறையில் அவர்களிடம் {தேவர்களிடம்} பேசத் தொடங்கினாள்.(13)

[1] "இவன் தேவர்களின் கட்டடக் கலைஞனாவான் {சிற்பி}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] "மிகச் சிறந்த இருக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "சீடனுக்காகக் குசப் புற்களால் முறையாக அமைக்கப்பட்ட இருக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "ஒரு வகை மரத்தாலான இருக்கைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

பூமி, "ஓ! தேவா, என்னை நீ ஆதரிப்பாயாக. மொத்த அண்டமும் உன்னால் நிலைத்திருக்கிறது. உயிரினங்களையும், மூவுலகங்களையும் பாதுகாப்பவன் நீயே.(14) உன் ஆற்றலினாலும், பலத்தினாலும் நீ நீடிக்கச் செய்யும் எதையும், உன் உதவியின் மூலம் நான் பின்னர்த் தாங்குகிறேன்.(15) நீ தாங்கும் எதையும் நான் தாங்குகிறேன், மேலும், நீ நீடிக்கச் செய்யாத எதையும் நானும் வைத்துக் கொள்வதில்லை. உன்னால் தாங்கமுடியாத எதுவும் இந்த அண்டத்தில் இல்லை.(16) ஓ! தலைவனான நாராயணா, பல்வேறு யுகங்களில், உலகின் நன்மைக்காகச் சுமையில் இருந்து என்னை நீ விடுவித்திருக்கிறாய்.(17) நான் உன் ஆற்றலால் பீடிக்கப்பட்டு, பாதாள லோகத்திற்குச் சென்றேன். ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் உன் தயவில் இருக்கிறேன். என்னை நீ காப்பாயாக.(18) தீயவர்களான தானவர்கள் மற்றும் ராட்சசர்களால் நான் தாக்கப்பட்டிருக்கிறேன். என் நித்திய மீட்பன் நீயே, உன் தயவிலேயே எப்போதும் நான் இருக்கிறேன்.(19) சுமைகள் அனைத்திலிருந்தும் என்னை விடுவிக்கும் நாராயணனின் புகலிடத்தை நான் நாடாதவரை, பேரச்சத்தின் ஆதிக்கத்திலேயே நான் இருப்பேன் என்பதை நூறு மடங்கு {நூறு வழிகளில்} அறிந்திருக்கிறேன்.(20)

தாமரையில் உதித்த பிரம்மனால் உழவு, வணிகம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான பிற வழிமுறைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர், நான் பழங்காலத்தில் அளவில் சிறுத்திருந்தேன். மண்ணாலான இருபெரும் அசுரர்கள் என்னைப் பிணைத்துக் கொண்டு முன் பிறந்திருந்தனர்.(21) இந்த உயரான்ம விஷ்ணு பெருங்கடலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இவனது காதுகளில் இருந்து உண்டான அவர்கள், இரண்டு மரத்துண்டுகளைப் போல இருந்தனர்.(22) பெரும்பாட்டனால் {பிரம்மனால்} அனுப்பப்பட்ட காற்றானது {வாயு}, உயிர் மூச்சின் வடிவில் அவ்விரு தானவர்களின் உடலுக்குள் நுழைந்தது. அதன்பிறகு அந்தப் பேரசுரர்கள் இருவரும் வானத்தை மறைத்தபடி வளரத் தொடங்கினர்.(23) உயிர் மூச்சுகளைக் கொடையாகப் பெற்ற அவ்விருவரையும் பிரம்மன் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டான். அவர்களில் ஒருவன் மென்மையானவனாகவும், மற்றவன் கடுமையானவனாகவும் தோன்றினான்.(24) நீரில் பிறந்த தலைவனான பிரம்மன், அவர்களுக்குப் பெயர்களைக் கொடுத்தான். மென்மையானவன் மது என்று பெயரிடப்பட்டான், கடுமையாக இருந்த மற்றவன் கைடபன் என்று அழைக்கப்பட்டான்.(25)

அவ்விரு தைத்தியர்கள் இவ்வாறு பெயரிடப்பட்டபோது, தங்கள் பலத்திலும், அச்சமற்ற நிலையிலும் செருக்கு மிகுந்தவர்களாக ஒரே நீர்ப்பரப்பாக மாற்றப்பட்ட உலகில் போரை நாடித் திரியத் தொடங்கினர்.(26) அனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மன், இவ்வாறு அவர்கள் அணுகுவதைக் கண்டு, அண்டப் பெருங்கடலான நீரில் மறைந்து போனான்.(27) நான்கு முகங்களைக் கொண்ட பெரும்பாட்டன் {பிரம்மன்}, தாமரை உந்தி {பத்மநாபனான} விஷ்ணுவின் உந்தியில் உதித்த தாமரையில் கமுக்கமாக வாழ விரும்பினான்.(28) நாராயணனின் பேரர்களான மதுவும், கைடபனும் இவ்வாறு நீரில் நீண்ட பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தபோதும் கிஞ்சிற்றும் கலக்கமடையாதிருந்தனர்.(29) பல ஆண்டுகள் கழிந்த பிறகு, மது மற்றும் கைடபன் என்ற அவ்விரு அசுரர்கள், பிரம்மன் இருந்த இடத்திற்கு வந்தனர்.(30)

பிரம்மன், பயங்கரமானவர்களும், பேருடல் படைத்தவர்களும், அடக்கப்பட முடியாதவர்களுமான அவ்விரு தானவர்களையும் கண்டு, {தான் இருந்த} தாமரையின் தண்டால் நாராயணனைத் தொந்தரவு செய்தான். பெரும் பிரகாசம் கொண்டவனும், தாமரை உந்தி கொண்டவனுமான அந்தத் தேவன் இதனால் தன் படுக்கையில் இருந்து எழுந்தான்.(31) அந்த நேரத்தில் மூவுலகங்களும் நீரால் மறைக்கப்பட்டிருந்ததால், அந்த நீர்ப்பரப்பில் நாராயணனுக்கும், மதுகைடபர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது.(32) அந்தப் பயங்கரப்போர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்தது, அந்தப் போரினால் அந்தத் தானவர்கள் இருவரும் கிஞ்சிற்றும் களைப்படையவில்லை.(33) நீண்ட காலத்திற்குப் பிறகு, போரில் பயங்கரர்களான அவ்விரு தானவர்களும், இதய மகிழ்ச்சியுடம் தலைவன் நாராயணனிடம், "உன்னுடனான போரில் நாங்கள் பெரும் நிறைவடைந்தோம். பெரும் விருப்பத்திற்குரிய எங்கள் காலன் {மரணம்} நீயே. நீர் நிறையாத பூமியில் ஓரிடத்தில் எங்களுக்கு அழிவைக் கொண்டு வருவாயாக.(34,35) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உன்னால் கொல்லப்பட்டு, போரில் எங்களை வீழ்த்தும் உனக்கே நாங்கள் மகன்களாவோம்" என்றனர்[5].(36)

[5] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "நீ எங்களுடன் செய்த போரில் நாங்கள் நிறைவடைகிறோம், சூழ்நிலை அமைந்தால் எங்களுக்குக் காலனாகப் போகும் உன்னைப் பாராட்டுகிறோம். ஆனால் நாங்கள் எங்களைக் கொல்பவர்களின் மகனாவோம் என முன்பே விதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, பூமியில் நீரில்லாத ஓரிடத்தில் எங்களை நீ வீழ்த்தப் பரிந்துரைக்கிறோம். அதன் மூலம் நாங்கள் உன் மகன்களாக மீண்டும் பிறப்போம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ! தேவர்களில் உயர்ந்தவனே, உன்னுடனான இந்தப் போரால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தப் போரில் உன் கைகளால் எங்களுக்கு மரணம் ஏற்படும் என்பதில் செருக்குக் கொள்கிறோம். எனினும், நீரில்லாத ஓரிடத்தில் எங்களைக் கொல்வாயாக. நாங்கள் கொல்லப்பட்டதும், நாங்கள் உன் மகன்களாப் பிறக்க வேண்டும். போரில் எங்களை ஒருவன் வீழ்த்தினால், நாங்கள் அவனது மகன்களாக வேண்டும்" என்றிருக்கிறது.

போரில் நாராயணன், தன் இரு கைகளிலும் அவ்விரு அசுரர்களையும் பற்றி அவர்களைத் தாக்கினான். அதன் பேரில் மதுவும், கைடபனும் மரணத்தைச் சந்தித்தனர்.(37) இவ்வாறு கொல்லப்பட்ட இரு தைத்தியர்களும் நீரால் நிறைந்தனர். அவர்கள் இருவரின் உடல்களும் ஒன்றாக இணைந்தன. பிறகு, நீரின் அலைகளால் கடையப்பட்ட அவர்கள் கொழுப்பை வெளியிடத் தொடங்கினர். நீர் அந்தக் கொழுப்பால் மறைக்கப்பட்டது. ஓ! பாவமற்றவனே, அதன்பின்னர் அவர்கள் மறைந்தனர், தலைவன் நாராயணன், தன் படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டான்.(38-39) மது மற்றும் கைடபன் என்ற அசுரர்களின் கொழுப்பால் நான் மறைக்கப்பட்டதால் மேதினி என்ற பெயரைப் பெற்றேன். இந்தத் தாமரை உந்தி தேவனின் சக்தியால் நான் நித்திய அண்டமானேன்[6].(40)

[6] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "அப்போது நாராயணன், நீரற்ற தளமான தன் உள்ளங்கைகளெனும் கிண்ணத்திற்குள் அவர்களைத் தட்டினான்; தன் கக்கங்களுக்குள் வைத்து மது மற்றும் கைடபன் என்ற அவ்விரு அசுரர்களையும் தாக்கினான்; அவர்கள் நசுக்கிக் கொன்று, அவர்களின் எச்சங்களைத் தன்னைச் சுற்றி இருந்த நீருக்குள் வீசி எறிந்தான். இவ்வாறு கொல்லப்பட்டு, நீரில் வீசப்பட்ட அவ்விரு அசுரர்களின் சடலங்களும் நீரில் மிதந்து ஒன்றாக இணைந்தன, பிறகு அலைகளால் தாக்கப்பட்ட அந்த உடலானது தன் கொழுப்பை நீரில் வெளியிட்டு, நீரின் மொத்த பரப்பிலும் அந்தக் கொழுப்பின் நுரை பரவியதால் அவ்விரு அசுரர்களின் உடல்களும் மறைந்தன. ஓ! பாவமற்ற ஜனமேஜயா, அதன்பிறகு, நாராயணன், படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டான். அந்த அசுரர்களின் கொழுப்பில் கொஞ்சத்தைத் திரட்டி என்றென்றும் நான் கடினப்படுத்தப்பட்டேன். அதே வேளையில் எஞ்சிய கொழுப்பானது மறைந்து போன அந்த அசுரர்களுடன் மறைந்தே போனது. அசுரர்களின் கொழுப்பான மேதஸ் என்னை மூடியதன் விளைவால் நான் மேதினி என்ற பெயரைப் பெற்றேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் போரில் தைத்தியர்களைத் தன் கரங்களில் பற்றிய அவன் {நீரற்ற இடமான} அங்கேயே அவர்களை நசுக்கினான். இவ்வாறு மதுவும், கைடபனும் கொல்லப்பட்டனர். அவன் அவர்களது உடலை நீரில் வீசினான். நீரின் அலைகளில் வீசப்பட்டதும் அந்தத் தைத்தியர்களின் உடல்கள் ஒன்றாகி, கொழுப்பை வெளியிடும் வகையில் கடையப்பட்டன. அந்தக் கொழுப்பு நீரை மறைத்ததும் உடல்கள் மறைந்தன. இவ்வாறு சிறப்புமிக்க நாராயணன், குடிமக்களைப் படைக்கத் தொடங்கினான். அந்தத் தைத்தியர்களின் கொழுப்பால் படைக்கப்பட்டதாலேயே நான் மேதினி என்று அழைக்கப்பட்டு வருகிறேன்" என்றிருக்கிறது.

மீண்டும் அந்தத் தலைவன், மார்க்கண்டேய முனியின் முன்னிலையில் ஒரு பன்றியின் {வராகத்தின்} வடிவை ஏற்றுத் தன் தந்தம் ஒன்றால் நீரில் இருந்து என்னை உயர்த்தினான்.(41) மீண்டும் மற்றொரு நேரம் கனல்தெறிக்கும் உங்கள் முன்னிலையில் பலம்நிறைந்தவனான விஷ்ணு, தைத்திய தலைவன் பலியிடம் இருந்து என்னை விடுவித்தான்.(42) இப்போது ஒடுக்கப்படுகிறவளும், பாதுகாக்க யாரும் அற்றவளுமான நான், தன் பற்றார்வங்களில் எப்போதும் விருப்பம் கொண்டவனும், அண்டத்தின் தலைவனுமான கதாதரனின் புகலிடத்தை நாடுகிறேன்.(43) பொன்னுக்குக் காரணம் நெருப்பு {அக்னி}, வீண்மீன்களுக்குக் காரணம் சூரியன், அவ்வாறே எனக்கு ஆதரவு நாராயணன் ஆவான்.(44) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டத்தை நான் தனியாகவே தாங்குகிறேன். என்னால் தாங்கப்படும் இவை அனைத்தையும் கதாதரன் ஆதரிக்கிறான்.(45)

என் சுமையில் இருந்து என்னை விடுவிக்க விரும்பிய ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்}, என்னை இருபத்தோரு முறை க்ஷத்திரியர்கள் அற்றவளாகச் செய்தார்.(46) பிருகுவின் மகனான ராமர், ஒரு வெற்றித்தூணை எழுப்பி, தன் தந்தையின் ஈமச் சடங்கில் அரசக் குருதியைக் கொண்டு என்னைத் தணிவடையச் செய்து, பிறகு கசியபரிடம் தெரிவித்தார்.(47) கொழுப்பு, இறைச்சி, எலும்புகளில் இருந்து வெளிவரும் கெட்ட நாற்றத்தால் நிறைந்தவளாக, க்ஷத்திரியர்களின் குருதியால் நிரம்பியவளாக, மாதவிடாய் காலத்தில் இருக்கும் ஓர் இளங்காரிகையைப் போலக் கசியபரின் முன்பு நான் தோன்றினேன்.(48) அப்போது பிராமண முனிவரான கசியபர் என்னிடம், "ஓ! பூமியே, நீ ஏன் இவ்வளவு மனச்சோர்வுடன் இருக்கிறாய்? ஒரு வீரனின் மனைவியாக இருந்து கொண்டு, நீ ஏன் அவமான நோன்பை நோற்கிறாய்?" என்று கேட்டார்[7].(49) அதற்கு நான் உலகின் குடிமுதல்வரான கசியபரிடம், "ஓ! பிராமணரே, பெரும்பார்க்கவர் {பரசுராமர்} என் கணவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்.(50) ஆயுதங்களில் வாழும் பலமிக்க க்ஷத்திரியர்கள் அனைவரையும் நான் இழந்துவிட்டேன், நான் என் கணவனை இழந்துவிட்டேன். நான் என்னில் வெறுமையான நகரங்களைச் சுமக்க விரும்பவில்லை. எனவே, ஓ! மதிப்புக்குரிய ஐயா, கிராமங்கள் மற்றும் நகரங்களால் நிறைந்திருப்பவளும், கடல்களால் மாலையிடப்பட்டவளுமான என்னைப் பாதுகாக்க வல்ல மன்னனை எனக்கு அளிப்பீராக" என்று கேட்டேன்.

[7] தேசிராஜுஹனுமந்தராவின் பதிப்பில், "பூமிப்பெண்ணே, உன் முகம் எதனால் தாழ்ந்திருக்கிறது. நீ வீரர்களின் மனைவித்தன்மை என்ற நோன்பு {வீரபத்னீவிரதத்தை} மேற்கொண்டாலும் மனந்தளர்ந்திருக்கிறாயே" என்று கேட்பதாக இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஏன் உன் முகம் தாழ்ந்திருக்கிறது? துணிச்சல்மிக்கவர்களின் மனைவியாக இருக்கும் நோன்பை நீ மேற்கொள்கிறாய். ஒரு வீரனுக்கு மனைவியாக இருக்கும் அந்நோன்பைப் பின்பற்றுவாயாக" என்றிருக்கிறது.

என் சொற்களைக் கேட்ட எல்லாம்வல்ல தலைவன் {கசியபர்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்னார். அதன்பிறகு மனிதர்களின் மன்னனான மனுவை எனக்குக் கொடுத்தார்.(53) அதன்பிறகு மனுவில் இருந்து தோன்றியவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான இக்ஷ்வாகு குல மன்னர்களை அடைந்த நான், சக்திமிக்கக் காலத்தின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு மன்னனின் கைகளில் இருந்து மற்றொரு மன்னனின் கைகளுக்குக் கொடுக்கப்பட்டேன்.(54) அந்தத் தலைவன் {கசியபர்}, மனிதர்களின் மன்னனான நுண்ணறிவுமிக்க மனுவை எனக்குக் கொடுத்தபோது, பெரும் முனிவர்களின் குடும்பங்களில் பிறந்த பல மன்னர்கள் என்னை ஆட்சி செய்தனர்.(55) வீர க்ஷத்திரியர்கள் பலர் என்னை வென்று தேவலோகம் சென்றனர். காலத்தின் ஆதிக்கத்தின் கீழ் அவர்கள் என்னில் மறைந்தனர்.(56) போரில் எப்போதும் வெல்பவர்களான சக்திவாய்ந்த க்ஷத்திரியர்கள், என் நிமித்தமாக இவ்வுலகில் ஒருவரோடொருவர் போரிட்டனர், இன்னும் போரிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.(57) உன்னால் அனுப்பப்பட்ட விதியின் எல்லை இதுதான். உனக்கு என்னிடம் பரிவிரக்கம் இருந்தால், என் சுமையில் இருந்து என்னை விடுவிக்க நீ விரும்பினால், உலகின் நன்மைக்காகவும், மன்னர்களின் அழிவுக்காகவும் ஒரு போரை ஏற்பாடு செய்வாயாக. எழில்மிகுந்த சக்கரதரனே எனக்குப் பாதுகாப்பை அருள்வாயாக.(58,59) சுமையால் ஒடுக்கப்பட்டு வந்த என்னை அதலிருந்து விடுவிக்க விரும்பினால், நாராயணனே எனக்கு ஆணையிடட்டும்" என்றாள் {பூமாதேவி}" என்றார் {வைசம்பாயனர்}.(60)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 60
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English